இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் திங்கட்கிழமை 17.04.2023 முதல் நீதிமன்ற வளாகத்திற்குள் வருகை தரும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் மற்றும் வழக்காடிகள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வருவதும் வளாகத்திற்குள் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மேலே குறிப்பிட்டுள்ள சுற்றறிக்கை மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
