மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறிப்பு: ரவுடி கும்பல் கைவரிசையா?
பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை...
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). சம்பவத்தன்று இவர், மளிகை கடையில் வசூலான ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்துவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். 4 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியான தலைமை தபால் நிலையம் அருகே அவர் சென்ற போது அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து அறிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகுமாரிடம் பணம் இருப்பது மர்ம நபர்களுக்கு எப்படி தெரியும்?, அவருடன் வேலை பார்த்த சக ஊழியர் மர்ம நபர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தாரா?, ஆட்டோ டிரைவர் இதற்கு உடந்தையா? என்பன போன்ற கோணங்களில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் விசாரணை நடத்தினார். மேலும், திருச்சி கண்ட்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், திருச்சி வரகனேரி மற்றும் அரியமங்கலம் பகுதிகளை சேர்ந்த 2 ரவுடிகள் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. தலை மறைவாக உள்ள அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்த பெண் உள்பட 3 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் பிடித்து , தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாாிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.