திருச்சி வரகனேரி சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு திருவெறும்பூர் அருகே எல்லகுடி பகுதியில் 52 சென்ட் காலி நிலம் உள்ளது. இதனை அவர் 1985ல் இன்னொரு நபரிடம் இருந்து வாங்கியுள்ளார். தற்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இந்த நிலத்தை சுற்றி பன்னீர்செல்வம் இரும்பு வேலி அமைத்திருந்தார். இந்த வேலியை கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் சிலர் பிரித்து வேறு வேலி அமைக்கும் தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்றார். அப்போது வேலி அமைத்துக் கொண்டிருந்த தொழிலாளிகளிடம் கேட்டபோது, பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை திருச்சி பெரிய கம்மாள தெரு பகுதியைச் சேர்ந்த பிரடி(56) என்பவர் வாங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் வேலி அமைத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அவர் ஆடிப் போனார். நீங்கள் கூறும் பன்னீர்செல்வம் நான்தான். யாருக்கும் நிலத்தை நான் விற்கவில்லை என தெரிவித்து திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து அவரது நிலத்தை பிரடி தனது பெயருக்கு கிரயம் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறும்போது, முதலில் பன்னீர்செல்வம் பெயரில் போலி ஆதார் கார்டு ஒன்றை பிரடி தயாரித்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட தகவல்களை புரோக்கர்கள் மூலம் சேகரித்தார். அதன் பின்னர் பன்னீர் செல்வத்துக்கு பதிலாக இன்னொரு நபரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து தனது ஒரிஜினல் பத்திரம் மணப்பாறை மாரியம்மன் கோவில் பகுதியில் தொலைந்து விட்டதாக மணப்பாறை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரிஜினல் பத்திரங்கள் கிடைக்க வழிவகை செய்தனர். பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் மாற்று பத்திரம் கிடைக்கப்பெற்றதும் பன்னீர்செல்வம் போன்று அதே நபரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து அவரிடமிருந்து பிரடி அந்த நிலத்தை தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளார். திருவரம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதில் பன்னீர்செல்வம் போன்று வேடம் தரித்த நபர் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. சாட்சி கையெழுத்து இட்ட திருச்சி அரியமங்கலம் இலந்தைப்பட்டி மோதிலால் தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்( 42), அரியமங்கலம் மலையப்ப நகர் காமராஜர் தெரு பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (42) போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பிரடி உட்பட மேற்கண்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். பழைய பத்திரங்களில் போட்டோக்கள் எதுவும் இடம்பெறுவதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. முக்கிய குற்றவாளியான பிரடி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பழைய இரும்பு வியாபாரியின் ரூ. 1 கோடி நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.