அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி ‘செட்’ தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்-இணை பேராசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் செட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்- இணை பேராசிரியர் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்றும், இப்பணிகளுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் -18 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.