2025-26-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தேர்வு மையம் அமைப்பது தொடர்பான கருத்துருவை சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் இருந்து பெற்று கல்வித்துறை அதிகாரிகள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை சார்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுபப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், 2025-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட கருத்துருவை அனுப்பி இயக்குனரின் ஆணை பெறவேண்டும். முதன்மை கல்வி அதிகாரியின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு பெறப்படும் கருத்துருக்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் விதிகளின்படி தகுதியுள்ளதா? என உறுதிசெய்த பின்னரே அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு விதிகளின்படி இல்லாத பள்ளிகளை பரிந்துரைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் 10 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்வு மையங்களுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க
வேண்டும். அவ்வாறு பெறாத பள்ளிகள் தேர்வுமையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. அதன்படி, வருகிற 15-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) கருத்துருவை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.