அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒரு பிணைப்பு இல்லை- * திருச்சியில் திருமாவளவன் பேட்டி…!
கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக தனியார் ஹோட்டலில் இன்று (மே 28) செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணி மீது அவருக்கு பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணி தான் முழு வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது. அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. திமுக கூட்டணி மீது பாஜகவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார். கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார். இதிலிருந்து அவர்களுக்குள் முரண்பாடு இருப்பது தெரிகிறது. நூறு சதவீதம் தேர்ச்சி பெறாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதை வரவேற்கவும் வேண்டும் என்றார். பேட்டியின் போது திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.