“தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
“தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 4-ம் தேதி காலை 9.30 மணி முதல் திருச்சி இ.ஆர்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வர். மேலும், விவரம் தேவைப்படுவோர் 0431-401011 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments are closed.