கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த இபிஎஸ்…!* யார் இந்த தனபால்… இன்பதுரை…
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்கள் நான்கு பேர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் இன்று ( ஜூன் 1) அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்ய சபா சீட்டு தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கடந்த சில நாட்களாக தேமுதிக வலியுறுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. அதேபோல அதிமுக முக்கிய நிர்வாகிகள் முட்டி மோதிய நிலையில் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா பாணியில் கட்சியில் அவ்வளவு அறிமுகம் இல்லாத இருவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த தனபால்?…
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனபால் தற்போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பு திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக வேட்பாளர் சொக்கலிங்கம் மற்றும் பாமக வேட்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவரை தோற்கடித்து 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு போட்டியிட்ட தனபால் திமுக வேட்பாளர் மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார். வட மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒரு தொகுதி கொடுக்க வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு ராஜ்யசபா வேட்பாளரான இன்பதுரை ராதாபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அப்போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளார். மேலும் வழக்கறிஞரான இன்பதுரை அதிமுகவிற்காக பல்வேறு வழக்குகளில் வாதாடி வெற்றியும் பெற்று கொடுத்துள்ளார்.அதிமுக தலைமையின் ‘குட்டு லிஸ்டில்’ உள்ள இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Comments are closed.