திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன், அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடர்பாக மோதல் போக்கு இருந்தது.இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. கிருஷ்ணப்பிரியா பள்ளிக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். பிரச்னைக்குரிய மூவரும் ஒரே இடத்தில் பணியாற்றினால் மேலும் பிரச்னை தொடரும் என்பதைக் கருத்தில் கொண்டு, மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அந்த வகையில், தலைமை ஆசிரியர் அன்பரசன் வி.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை அர்ச்சனா இனாம் மாத்துார் அரசு மேல்நிலை பள்ளிக்கும், ஆசிரியை சுதா என். பூலாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் தலைமை ஆசிரியர் அன்பரசன் மட்டும் அந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.ஆனால், ஆசிரியைகள் இருவரும் தங்களுக்கான மாறுதல் உத்தரவை வாங்க மறுத்து, மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். அன்பரசனுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார்.
Comments are closed.