தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன. 6) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தெரிகிறது. தமிழக சட்டசபை வருகிற 20-ம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால், கவர்னர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமித்ஷாவை அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கவர்னரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
.

Comments are closed.