என்ன வேணும், எது வேணும் சாப்பிடுங்க… மதுரை பொதுக்குழு கூட்டத்தில் 24 வகையான சைவம், அசைவம் தடபுடல் விருந்து- அசத்திய திமுக…!
மதுரை உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், மதுரையில் 7-வது முறையாக திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்க அடித்தளம் அமைக்கும் பொதுக்குழு கூட்டம். இது வழக்கமான பொதுக்குழு கூட்டம் அல்ல. பேரவை தேர்தலில் திமுக 7-வது முறையாக வெற்றி வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு கூட்டம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லை என ஆணவமாக சொல்ல நான் விரும்புவதில்லை. அதேநேரத்தில் இரவு பகல் பாராமல், தன்னலம் கருதாமல் கட்சிப் பணியாற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்களால் பேரவை தேர்தலில் மீண்டும் நமது கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன்.
திமுக அனுபவிக்கும் சோதனைகளும், நெருக்கடிகளும் சாதாரணமானதல்ல.ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியை போன்று தான் போராட வேண்டி உள்ளது.இந்த போராட்டம் மாநில உரிமைக்கானது. அரசியல் எதிரிகள், கொள்கை எதிரிகள், இன எதிரிகள், துரோகிகள் என அனைத்து பக்கங்களிலும் எதிரிகள் உள்ளனர். அவதூறு மூலம் சிலர் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர். எத்தனை அவதூறு பரப்பப்பட்டாலும் திமுக ஆட்சிக்கு எதிரான அலையை விட மக்கள் ஆதரவு அலை தான் அதிகமாக வீசுகிறது என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 24 வகை சைவம், அசைவம் என இரு வகைகளாக உணவு தயாரிக்கப்பட்டு இருந்தது. அசைவத்தில் மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன் வருவல், சிக்கன்- 65, மட்டன் கோலா உருண்டை, மட்டன் உப்புக்கறி, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் எண்ணெய் சுக்கா, பன் அல்வா, எலும்பு குழம்பு, அயிரை மீன் குழம்பு, ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, பீடா, வாழைப்பழம் என 24 வகைகள் இடம்பெற்று இருந்தன. அதேபோல சைவத்திலும் குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர் பாகு, உருளைக்கிழங்கு காரக்கறி, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் பிரை, காளிபிளவர் சில்லி, சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, வெள்ளை சாதம், பருப்பு பொடி, நெய், சாம்பார், தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர் உள்ளிட்ட 24 வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்த பின்னர் உணவருந்தும் கூடத்திற்கு வந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். முதலமைச்சருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதேநேரத்தில் அவர் சைவ உணவில் சில பதார்த்தங்களை கேட்டு வாங்கி விரும்பி சாப்பிட்டார். இதுபோல தனியாக மற்றொரு அரங்கிலும் உணவு பரிமாறப்பட்டது அங்கும் ஏராளமானோர் சென்று உணவருந்தினர். இந்த உணவுகளை கேரளாவில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வந்திருந்து பரிமாறினர்.
Comments are closed.