புழுதி பறக்கும் சாலை, அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்- நடவடிக்கை கோரி திருச்சி பாலக்கரையில் பொதுமக்கள் மறியல்( வீடியோ இணைப்பு)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை, வேர்ஹவுஸ் வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் வேர் ஹவுஸ் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், ஒரு மாதமாகியும் திட்டப் பணியும் முழுமையாக முடிவடையவில்லை, தோண்டப்பட்ட பள்ளமும் மூடப்படவில்லை. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து கண்களில் விழுகிறது. பள்ளமும், படுகுழியுமான சாலையில் செல்லும் போது சில வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும், இந்த சாலையின் இருபுறமும் உள்ள கடைகளில் புழுதி படர்ந்து உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வியாபாரமே பார்க்க முடியவில்லை என அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், இந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரிடம் தெரிவித்தும் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், பொறுமை இழந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று (ஜூன் 18 ) ஒன்று திரண்டு பாலக்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், ஒரு மாத காலமாகியும் இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும், வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால் கடைகளில் படர்ந்து விடுகிறது. இதனால் எங்களது வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. இந்த ஏரியா கவுன்சிலர் இங்கு வந்து உரிய பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். அதற்கு போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Comments are closed.