தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் களத்தில், பெண்களாலும் சாதிக்க முடியும் என்று காலூன்றி ஜெயித்துக் காட்டியவர் அவர். கடுமையான சவால்களுக்கு மத்தியில், அரசியலில் அவர் பிரமிக்கத்தக்க எழுச்சியைப் பெற்று அசைக்க முடியாத தலைவராக உருவானார் என்பது வரலாறு. அவரது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா சிலை மற்றும் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு இன்று(டிச.5) செங்கோட்டையன், ஜெயலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா நினைவு நாளில் அவரது தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்” என கூறியுள்ளார்.

Comments are closed.