Rock Fort Times
Online News

10, 12 வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் சந்தேகமா?* இனி ஆர்டிஐ மூலம் விடைத்தாள்களை பெறலாம்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து வரும் மாணவி பிரியதர்ஷினி, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், கடந்த மார்ச் 2023-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வேலம்மாள் மேல்நிலை பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ‘பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றதில், தான் எழுதிய தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்களின் நகல்களை அரசு தேர்வுகள் இயக்கக பொது தகவல் அலுவலரிடம் கேட்ட போது, தேர்வு முடிந்த ஐந்து நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது என்பதால், விடைத்தாள்களை வழங்க முடியாது’ என பதில் அளித்தார். அதுதொடர்பாக மாணவி அளித்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி, “உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி, திருத்தப்பட்ட விடைத்தாள்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பெறலாம். எனவே, விடைத்தாள்கள் நகல்களை கேட்டுப் பெற இச்சட்டத்தின் படி, மனுதாரருக்கு உரிமை உள்ளது. அதன்படி, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியோ அல்லது தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைக் கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகங்களை பெற்றுக் கொள்ளலாம்” என்றார். மேலும், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் மாண்பை நிலை நிறுத்தும் வகையில், இனி வருங்காலங்களில் மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் எவ்வளவு மாதங்கள் பராமரிக்கிறதோ? அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்