Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், அதை அமித்ஷா நிச்சயம் பார்ப்பார்- திருச்சியில் வைகோ பேட்டி…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவா சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தான் திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். கொள்கை அடிப்படையில்தான் திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தோம். பாஜக அரசு பொறுப்பேற்ற போது அந்த பதவி ஏற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்து இருந்தார்கள். தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை அழைக்கக்கூடாது என நான் பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டபோது அந்த கூட்டணியிலிருந்து வெளியேறினோம். அதே நிலைப்பாடுதான் தற்பொழுதும். தமிழ்நாட்டு நலனுக்காக தான் திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.திமுக கூட்டணிக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. மதிமுகவும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. செப்டம்பரில் திருச்சியில் நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிலும் இதனை நான் பிரகனடப்படுத்தவேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் பிழை என கூறினேனே தவிர அதிமுக குறித்தோ, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தோ எந்த இழிவான விமர்சனங்களையும் நான் முன் வைக்கவில்லை. ஆனால், அதிமுகவை சேர்ந்த சிலர் என் மீது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, வாழ்க வசவாளர்கள். இந்திய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டிய நபர் அமித்ஷா. அவர் இந்துத்துவா சக்திகளின் முதுகெலும்பாக இருந்து இந்துத்துவா சக்திகளை தூண்டி விட்டு வருகிறார். கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் திமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதை அமித்ஷா நிச்சயம் பார்ப்பார். மல்லை சத்யா கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை. அவர் குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார் . பேட்டியின்போது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணை பொது செயலாளர் ரொக்கையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டிடிசி சேரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்