அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று( மே 25) திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் தான். அதுவே, தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை. இந்தாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று அது குறித்து முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு நெருக்கடி தருகிறது. அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. பாஜக, திமுகவோடு நெருங்கி விடக்கூடாது, நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் எடப்பாடி பழனிச்சாமியிடம் வெளிப்படுகிறது. திமுக மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்கி நடத்தும் பொழுது பாஜகவுடன் நெருங்கும் வரலாற்றுப் பிழையை திமுக ஒரு போதும் செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது தொடர்பான விமர்சனத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கிறார்.கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல, இட்டு கட்டி எழுதப்பட்ட ஒன்று அல்ல, வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல, அதில் என்ன ஐயம் இருக்கிறது, அதில் முரணான தகவல் இருக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இன்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் அல்லது காழ்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் வரலாறு என்றைக்கும் வரலாறுதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது. அது மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி.தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால், போலியான கதையாடல் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா ஆபாச தளங்களும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் சூழல் உள்ளது. அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் மத்திய அரசு விதிக்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.