Rock Fort Times
Online News

திமுக நல்லவர் போல வேஷம் போடவில்லை- விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்…

மீன்வளத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரியின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த அங்கு குடியிருக்கும் மக்களுக்கு ஸ்ரீரங்கம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு பி.எல்.ஏ.2 செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது. மற்ற கட்சிகளின் பி.எல்.ஏ 2 வருவதை யாரும் தடுப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்கு சாவடிகளுக்கும் பி.எல்.ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். படிவத்தை நிரப்பி தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்ல கூடாது என கூறினால் எப்படி?. நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என எங்கள் மீது தான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாக தான் இதை செய்து வருகிறோம். மத்திய அரசு ஜல் ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜி.எஸ்.டி என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக நல்லவர்களாக இல்லாமல் தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு திமுகவும், முதலமைச்சரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். திமுக நல்லவர் போல் வேஷம் போடவில்லை, உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என கூறும் அதிமுகவினர் மீதமுள்ள தொகுதிகளை ஏன் விட்டுவிட்டார்கள். திருப்பதியில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் கொடுத்தது தப்பு இல்லை. எங்களை விமர்சனம் செய்தால் செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்