சீருடையுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது- போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு…!
தமிழக போலீஸ் அதிகாரிகள் சீருடை யுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக்கூடாது. டிவி மற்றும் யுடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் போது, ரகசிய தகவல்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் குறித்த தகவல்களை பகிர வேண்டாம் என போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பாக எஸ்பி மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு அவர் பிறப்பித்து உள்ள உத்தரவில், முக்கிய பொறுப்புகள் மற்றும் கடமைகளில் உள்ள அதிகாரிகள் சிலர், அலுவலக விஷயங்களையும், சீருடையில் உள்ள புகைப்படங்களையும் தங்களது தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதாக தகவல் வந்துள்ளது. சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். சில அதிகாரிகள், சீருடையுடன் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியமான அலுவலக விஷயங்களை பகிர்கின்றனர். இந்த விஷயங்கள் அகில இந்திய சேவை விதிகள் மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. யுடியூப் நேர்காணலின் போது, ரகசிய தகவல்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் குறித்த தகவல்களை பகிர வேண்டாம். டிவி நிகழ்ச்சிகள் அல்லது கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட அல்லது பங்கேற்க விரும்பும் அதிகாரி, அந்த நிகழ்ச்சி மற்றும் பேச உள்ள விஷயங்கள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால், பேச உள்ள முழு விஷயத்தையும் அரசிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். தனியார் விழாக்கள் மற்றும் நேர்காணலில் பங்கேற்பதற்கான உள்ளடக்கத்தை சரிபார்ப்பதற்கும், அனுமதி பெறுவதற்கும் மூத்த அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். அனைத்து அதிகாரிகளும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக அவர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.