Rock Fort Times
Online News

கிருஷ்ணகிரி அருகே சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து : 6 ரயில்கள் ரத்து.

தூத்துக்குடியில் இருந்து உரம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 6 பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து சேலம், தருமபுரி, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்த ரயில்வே பணியாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக பெங்களூர், ஓசூர், தருமபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் – சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பெங்களூரு கோட்டத்தின் சேலம் – யஸ்வந்த்பூர் (16212), தருமபுரி – பெங்களூரு (06278), பெங்களூரு – ஜோலார்பேட்டை (06551), ஜோலார்பேட்டை – பெங்களூர் (066552) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 7 ரயில்கள் சேலம் – திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை – கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில் – எஸ்எம்விடி பெங்களூரு-ரயில் (17236),பெங்களூரு – எர்ணாகுளம் (12677) ரயில், எஸ்எம்விடி பெங்களூரு காரைக்கால் (16529) ரயில் ,நெல்லை- தாதர் (11022) ரயில், தூத்துக்குடி – மைசூர் (16235) ரயில், கன்னூர் -யஸ்வந்த்பூர் (16528) ரயில், மயிலாடுதுறை – மைசூர் (16231) ரயில் ஆகியவை மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. இத்தகவலை பெங்களூர் , சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்