Rock Fort Times
Online News

இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வை அருளும் தீபத்திருநாள்….

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் காா்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபம் மொத்தம் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம்,  கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் , மறுநாள் சுடலை கார்த்திகை என்று மூன்று நாட்கள் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது . மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகை திருநாளில் விரதம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை தீப விரதத்தை பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கலாம். இரவில் பால், பழங்களை சாப்பிடலாம். கார்த்திகை திருநாள் முதல் நாள் அதிகாலை எழுந்து குளித்து பூஜையின் போது முருகன் துதிகளை அல்லது நமச்சிவாய மந்திரத்தை 12 முறை ஜெபிக்க வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது.பால் ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம் பருப்பு கஞ்சி இவற்றை உண்ணலாம்.

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி இன்று மாலை 5-30 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். மலர்களை தொடுத்து அதை இறைவனுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். கார்த்திகை தீபத்திருநாள் வீட்டில் உள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வை கொடுக்கும் திருநாள் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீப திருநாளை விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வை பெறலாம்.விளக்குகளில்
பஞ்சலோகம், வெள்ளி, பாவை, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு என பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது. தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்ற வேண்டும். மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும். சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப் பாக்கியத்தை அருளும். வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும். தாமரைத் தண்டின் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும் என்பது ஐதீகம்.

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது. பொதுவாக நல்லெண்ணெயால் விளக்கேற்றலாம். தற்சமயம் ஐந்து வகையான எண்ணெய்களைக் கொண்டு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகியவைகளை கலந்து பஞ்சமுகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்யும்போது சகல சம்பத்துக்களும் பெருகி, இறை அருள் கிட்டும்.

திருவிளக்குகள் இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால் அவற்றிற்கான மரியாதையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவைகளை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல் பொரியில் வெல்லப் பாகு சேர்த்து கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்தல் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் கார்த்திகை தீபத்தன்று அழகான அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த ஸ்லோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள். விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் விளக்கை ஊதி அணைப்பது தீமையைத் தரும். பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும். விளக்குகளை அமர்த்தும்போது ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று மனதில் தியானிப்பது நலம். விளக்குகளை வெறும் தரையில் வைப்பது நல்லதல்ல. பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்