Rock Fort Times
Online News

‘டீல்’ ஓவர்: விஜய் கோட்டைக்குள் என்ட்ரி ஆகிறார், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…?

அதிமுக ஒன்றிணையா விட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று பேசியதுடன் பிரிந்து சென்றவர்களை 15 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்கள் ‘கெடு’ விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதனால், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவர் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் ஒன்றாக சென்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கை கோர்த்ததால் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துவரும் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க பிரபல கட்சி காய் நகர்த்தியது. ஆனால் ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்து பழக்கப்பட்ட அவர் அந்த பிரபல கட்சிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மௌனம் காத்தார், செங்கோட்டையன். விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்த பிறகு அவரது கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன் போன்ற சீனியர்கள் இணைந்து செயல்பட்டனர். இதனால் விஜயகாந்துக்கு நல்ல அரசியல் அனுபவம் கிடைத்தது. ஆனால், விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு அவரது கட்சியில் சீனியர்கள் யாரும் இல்லை. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களே கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதிலிருந்து தற்போதுதான் தமிழக வெற்றிக்கழகம் மீண்டு வந்துள்ளது.

இந்நிலையில் கட்சியில் சீனியர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்த விஜயின் பார்வை, எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத, கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க செங்கோட்டையன் மீது பதிந்தது. அவரை தங்கள் கட்சிக்குள் கொண்டு வந்தால் என்ன? என்று யோசித்த அவர் அதற்கான டீலையும் தொடங்கினார். அவரது ஆலோசனையின் பேரில் செங்கோட்டையனை த.வெ.க.நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும்  அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகவும், அதற்கான ‘டீல்’ முடிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே செங்கோட்டையன் நாளை மறுநாள் (27.11.2025) த.வெ.க. வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விஜய் உடனான பேச்சுவார்த்தையானது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ முடிவை செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் வரும் 30ம் தேதி, செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார். எனவே அதற்கு முன்பாக தன்னுடைய நிலைப்பாட்டை செங்கோட்டையன் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்