Rock Fort Times
Online News

விமானத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சலுகை: நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்லலாம்…!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து யாத்திரை மேற்கொள்வர். குறிப்பாக கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் தரிசிக்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை திறக்கப்படுகிறது. இதேபோல, மகர விளக்கு பூஜை டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஐயப்ப சீசனில் இருமுடி கட்டிக் கொண்டு விமானங்களில் பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களது இருமுடியை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 20-ம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருமுடி பைகளை எக்ஸ்ரே உள்ளிட்ட ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்