Rock Fort Times
Online News

ஜி.எஸ்.டி.சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் நகை பட்டறை  வைத்துள்ளார். பட்டறையில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, தனது கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் வேண்டி மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.  விண்ணப்பத்தின் பேரில் இம்மாதம் 4 -ம்  தேதி வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் வந்து சேசுவின் கடையை ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர். அன்று மாலையே சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜி.எஸ்.டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார். அதற்கு வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி, ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்று ( 05.07.2023 ) புகார் அளித்தார்.  புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.  மணிகண்டன்  தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர் , ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சேசுவிடம் கொடுத்து அதனை கோவிந்த சாமியிடம் கொடுக்க கூறினர். அதன்படி சேசுவிடமிருந்து  கோவிந்தசாமி லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கோவிந்தசாமியை கையும்-களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்