திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தினமும் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாகும். ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான சக்திவேல் என்பவர் மற்ற கைதிகளுக்கு உணவு விநியோகம் செய்வது வழக்கமாம். இந்நிலையில் நேற்று இரவு அபிஷேக் (20), அஷன் அலி (28), பிரகாஷ்ராஜ் (20), ஷமீர் அஹமது (22), வாழமட்டை (எ) சச்சின் (20), சைவ சபரிராகவன் (19), நித்தின் (23), அஜிபுதீன் (25) ஆகிய 8 கைதிகளும் தாங்களவே உணவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சக்திவேல், உணவை நீங்களாக எடுக்காதீர்கள். என்னிடம் கேளுங்கள், நான் கொடுக்கிறேன் என்று கூறியதோடு இதனை காலையில் ஜெயிலரிடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த 8 கைதிகளும் சக்திவேலை திட்டி, கையால் தாக்கி மிரட்டினர். அந்த நேரத்தில், மற்றொரு கைதி அய்யர் என்பவர் அங்கு வந்தார். அவர் கூடியிருந்த 8 கைதிகளை பார்த்து சக்திவேலை ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த 8 கைதிகளும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ…என்று கூறி அவரையும் தாக்கி மிரட்டி உள்ளனர். இதில் சக்திவேல், அய்யருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த சிறைத் துறை அதிகாரி மணிகண்டன் கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் கைதிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.