திருச்சி, பீமநகர் கூனி பஜாரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது29). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று ( மே 31) இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சில மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.அவர் உடனே வெளிக்கதவில் வேறு ஒரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறையான 100க்கு தகவல் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பாலக்கரை போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களும் ராஜசேகரின் வீட்டு முன் திரண்டனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வீட்டிற்குள் சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 பேர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டார்கள். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராகுல்(25) ,சதீஷ்(20), நவநீதகிருஷ்ணன்(28), வெற்றிச்செல்வம்(20) என்பது தெரிய வந்தது.அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலக்கரை காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த், தனிப்படை காவலர்கள் விஜயகுமார், அஜ்மல்கான், அருண்குமார், ஜெகதீசன், கோபிக்கண்ணன் , செல்வம், வினித்ராம் ஆகியோர் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.கொள்ளையடிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நகைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.