திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 33 குழந்தைகள் அந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அதில் 8 குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை அனுமதித்தனர். 8 குழந்தைகளுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கயல்விழி, பிரியா என்ற இரு குழந்தைகள் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் தாய்ப்பால் இன்றி வளரும் இக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழப்பதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குழந்தைகள் இறப்பு குறித்து ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் நல மருத்துவரை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காப்பக குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள நாள்தோறும் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் அங்கு சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

