தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு மே 8, 9 தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்., திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் திருச்சி வருகை தருகிறார். 8-ம் தேதி காலை விமானம் மூலம் திருச்சி வரும் அவர், அங்கிருந்து துவாக்குடியில் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மாலை அங்கிருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம், கோர்ட், புத்தூர் நால்ரோடு, தில்லைநகர் வழியாக ரோடு ஷோ நடைபெறுகிறது. பின்னர்
கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி காலை கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக
ரோடு ஷோவில் பங்கேற்று ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அடைந்து புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதோடு 50 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்குகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆகவே, பாதுகாப்பு கருதி 08.05.2025 , 09.05.2025
ஆகிய இரண்டு நாட்கள் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.