Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் “ரோடு ஷோ” நடத்த முடிவு…!

திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும்,  பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 9-ம் தேதி திறந்து வைக்கிறார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8- ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், 9ம் தேதி காலை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதுடன் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டாக்களை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளின் போது 2 நாட்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர் – தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி நடந்தே செல்கிறார். மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார். இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்