தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை வந்த முதலமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற்சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரிகத்தின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்கக்கூடிய இந்தத் தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் வளர்ச்சிப் பணி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உங்களுடைய கருத்துக்களைக் கேட்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து, அதற்கென, பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில், அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்களாகப் பணிபுரியும் நீங்கள் அரசின் முன்னுரிமை இனங்கள் என்னென்ன என்பதை தெளிவாக உணர்ந்து, உங்களுடைய பணிகளில் அவற்றிற்கு முன்னுரிமை அளித்து, அத்திட்டங்களைத் துரிதப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசு எத்தகைய பெரிய திட்டங்களை வகுத்தாலும், அதனை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களாகிய உங்களுக்கும்தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் திட்டங்களை கள ஆய்வு செய்வதன் மூலம் துரிதப்படுத்துவதோடு, அதன் தரத்தினையும் உறுதி செய்யலாம். ஆகவே, கள ஆய்வுப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதோடு, சார்நிலை அலுவலர்கள் பணியையும் ஆய்வு மேற்கொள்ளுங்கள். உங்களுடைய உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு முக்கியமான இனம், பட்டா மாறுதல், பட்டாக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மற்றும் சான்றிதழ்களை குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்குதல் ஆகியவையாகும். ஒரு விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலகத்தில் மனு சமர்ப்பித்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஏற்கெனவே சட்டத்தில் வகுத்தபடி உள்ள கால அளவிற்குள், அந்தச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லது ஏன் வழங்க இயலாது என்பதற்கான தகவல் அவருக்கு சென்றடைய வேண்டும். இந்த நடைமுறை ஒவ்வொரு அலுவலகத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். இதனை அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகள் முறையாக வகுக்கப்பட வேண்டும். இதனை நான் அடுத்த ஆய்வுக் கூட்டத்தின் போது கட்டாயம் சரிபார்ப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை என்றாா். இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.