நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வராக இன்று(ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஏற்கனவே, 3 முறை முதல் மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ளார். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்
அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பாலகிருஷ்ணா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவை, பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது சந்திரபாபு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

Comments are closed.