கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். இவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர். மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து அதை ஏலம் விட்டதில் 20 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சத்யா வீட்டில் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். பண்ருட்டி நகர் பகுதியில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூட்டை, மூட்டையாக ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். அப்போது வெளியே
நின்றிருந்த சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் பொழுது சத்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Comments are closed.