பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்தவர் மிளகாய் பொடி வெங்கடேசன் (எ) கே.ஆர்.வெங்கடேஷ். இவர் மீது தமிழகம், ஆந்திரா, கேரளாவில் செம்மரம் கடத்தல், மிரட்டல், பணமோசடி உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். இந்தநிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கே.ஆர். வெங்கடேஷன் சந்தித்த புகைப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரா போலீசாரை டேக் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தொழிலதிபர்களை மிரட்டி பணமோசடி செய்த புகாரில் வெங்கடேஷை ஆவடி காவல் ஆணையரக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில், ஓபிசி பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து வெங்கடேஷ் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த கே.ஆர்.வெங்கடேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.