Rock Fort Times
Online News

கட்டாய வசூலுக்கு வருகிறது தடை..!- கடன் ஒழுங்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்…

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் நி்றைவடைந்தது. இந்த பேரவையில் கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும். அதன்படி, 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால், 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளை பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா மீது கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இறுதியில், தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்ட மசோதா உள்ளிட்ட 18 சட்ட மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்