சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் ‘பாலன் இல்லம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகம் மீது நேற்று ( 27.10.2023 ) இரவு மர்ம நபர்கள் சிலர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை கட்சி அலுவலகம் வந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு கற்கள் மற்றும் பாட்டில்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தென்சென்னை மாவட்டச் செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.