Rock Fort Times
Online News

ஏப்ரல் 14 சித்தரை விசு! பக்தியுடன் கொண்டாடுவோம்.

சித்திரை விசு என்று அழைக்கப்படும் ஏப்ரல் 14ஆம் தேதி அனைத்து சைவ வைணவ கோவில்களிலும் வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லா கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” என்று நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு. பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நாள்  என்ற   ஐந்து அங்கங்களைப் படிப்பது. இதில் திதியைச் சொல்வதன் மூலமாக மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களிலிருந்து விடுதலையும், நாளைச் சொல்வதினால் ஆயுள் விருத்தியும், யோகத்தைச் சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.   முந்தைய நாள் இரவே பூஜை அறையில் எடுத்து வைத்த மங்கலப் பொருள்களான வெற்றிலை, பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய   மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக, அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை சித்திரை விஷூ என்பார்கள். உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள், மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூப் பச்சடி. மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம். சர்க்கரைப் பொங்கலோ, பாயசமோ நைவேத்தியமாகப் படையலிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனையோடு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல செல்வங்களும் குடிகொள்ளும்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்