தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் மே 7ம் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன, இதன்படி உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன், 07-05-2025 அன்று காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஆன்லைன் மூலமாக https://www.tneaonline.org மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.