செயலி வழி வாடகை வாகன சேவையில் வாடிக்கையாளர்களிடம் பகல் கொள்ளை:* அரசு நடவடிக்கை எடுக்க இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வலியுறுத்தல்!
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதனால், செயலி மூலம் வாடகை வாகனங்களை அமர்த்தி கொண்டு சென்று வருகிறோம். இதற்கு சிலர் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர். இதனை பல வாடகை வாகன தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவையை வணிகமயமாக்கி, அவர்களின் அவசரத்தையும், கட்டாயத்தையும் பணமாக்கும் புதிய உத்தியைத் தற்போது கையாளத் தொடங்கியுள்ளன. சர்ஜ் பிரைசிங் (surge pricing) என்ற பெயரில் நடைபெறும் இந்தச் சுரண்டல் முறையில் மக்கள் வாடகை வாகனத்தை அதிகம் நாடும் மழைக்காலம், அலுவலக நேரம், பண்டிகை காலங்கள், அவசரகால மருத்துவ சேவை போன்ற தருணங்களில் கட்டணத்தைப் பல மடங்குவரை உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் நியாயம், கேட்பவர் அதிகம், சப்ளை குறைவு, எனவே வாடகை அதிகம் என்பதுதான். சென்னை உட்பட நகர்ப்புற வாழ்வில், பொதுப் போக்குவரத்து போதுமானதாக இல்லாத சூழலில், வாடகை வாகனங்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கின்றன. இந்தக் கட்டாய நிலையை இந்தக் கார்ப்பரேட் செயலி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த சர்ஜ் ப்ரைசிங் முறையால் மழை பெய்யும் நாளில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து மனிதர், சாதாரணமாக நூறு ரூபாய் வாடகையில் செல்லக்கூடிய இடத்திற்கு முந்நூறு ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இந்தக் கொள்ளையில் மிகவும் அவலமான விஷயம் என்னவென்றால், ஓட்டுநர்களின் நலன் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனங்களின் போலித்தனம். இந்தக் கூடுதல் கட்டணத்தில் பெரும்பகுதி நிறுவனத்தின் கமிஷனாகவே போய்விடுகிறது எனக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களுக்குக் கிடைப்பது வெறும் சில்லறைகள் மட்டுமே. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு, வாடகை வாகன கட்டணத்தை அரசு கட்டுப்படுத்துவது தான். உச்சநேர கூடுதல் கட்டணத்தை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும். நிலையான கட்டண முறையை அமல் படுத்த வேண்டும். அதேபோல், பொதுப் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தினால், இதுபோன்ற தனியார் கட்டண கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.