நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல்கள் காரணமாக அந்த சிலையை திறக்க முடியவில்லை. இதனால், சிவாஜி சிலை 14 ஆண்டுகளாக துணியால் மூடப்பட்டு இருந்தது. சிவாஜி சிலையை திறக்க கோரி அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். பொது இடத்தில் சிலை நிறுவப்பட்டு இருப்பதாலும், கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலும் சிலையை திறக்க இயலவில்லை. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், சிவாஜி சிலையை பாலக்கரை பகுதியில் திறக்க முடியாவிட்டாலும் வேறு இடத்திற்கு மாற்றி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, இதுகுறித்து முதல்- அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிலையில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையை மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா-மீனா தியேட்டர் எதிரே உள்ள பூங்காவில் நிறுவி திறக்க முடிவு செய்யப்பட்டது. பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா மே 9-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சிவாஜி சிலையையும் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இதற்காக பாலக்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள சிவாஜி சிலை கிரேன் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு சோனா- மீனா தியேட்டர் எதிரே உள்ள பூங்காவில் நிறுவப்பட்டது. இந்த இடத்திலும் சிவாஜி சிலையை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வார்னர்ஸ் சாலையில் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த சிவாஜி சிலை திறப்பு தற்போது இல்லை. வருங்காலங்களில் சட்டம் மற்றும் பொது பிரச்சனை ஏற்படாத வகையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பதற்கு வருகை தரும் முதல்வர், சிவாஜி சிலையை திறக்க வாய்ப்பில்லை என்றனர்.

Comments are closed.