ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய விவகாரம் ‘விஸ்வரூபம்’: ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கத்தினர் போலீஸ் அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான புகார்…!
அதிமுக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்தவகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி அணைக்கட்டில் பிரசாரம் செய்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் போது, கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆனால், அந்த ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிச்சாமி, நான் பேசும் இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வருகிறது. திட்டமிட்டு ஆம்புலன்ஸை அனுப்பி, பிரசார கூட்டத்தை குலைக்கப் பார்க்கின்றனர். இது திமுகவின் திட்டமிட்ட சதி என்று வசை பாடியதோடு அந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த முறை எனது கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டும் டிரைவர் அந்த ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்படுவார் என மிரட்டும் வகையில் பேசினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டம் நடத்திவிட்டு மிரட்டும் வகையில் பேசுவதா என எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.
தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த சுரேந்திரர் மீது, அ.தி.மு.க.,வினர் வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுரேந்திரரும் அதே நாளில், அணைக்கட்டு போலீசில் புகாரளித்தார். அதில், ‘பொது ஊழியரான தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாரத்தில் பழனிசாமி, மிரட்டும் தொனியில் பேசிய பின் தான், அ.தி.மு.க., தொண்டர்கள் என்னை தாக்கினர்’ என தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில் சுரேந்திரரை தாக்கியதாக அ.தி.மு.க.,வினர் 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மதுரை, திருவாரூர், கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி.,க்களிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில், அச்சங்கத்தின் மாநில செயலாளர் இருளாண்டி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் வேலூர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வயிற்றுப் போக்கு காரணமாக சிகிச்சை பெற்ற சந்திரா என்ற நோயாளியை, மேல் சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சுரேந்திரர் என்பவர் ஓட்டினார். அப்போது வேலூர் பிரதான சாலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ், கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டது. இதை பார்த்த பழனிச்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பார்த்து, மிரட்டல் தொனியில் பேசினார். உடனே, ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அடையாள அட்டை, மொபைல் போனையும் அ.தி.மு.க.,வினர் பறிக்க முயன்று அடிக்கப் பாய்ந்துள்ளனர். இது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி, பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed.