கோவை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று( மார்ச் 16) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார். முதல்-அமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு, விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவுகிறது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் சிறந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தமிழக வெற்றிக்கழகம், என்.டி.ஏ.மற்றும் ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றார். த.வெ.க., என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு, விஜய் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு, விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

Comments are closed.