கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை அமைக்க கோரி திருச்சியில் வருகிற 5ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டி தர கோரியும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பாக செப்டம்பர் 5-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்களும், குறிப்பாக சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வடிவில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நேப்பியர் பாலமும் கட்டிக்கொடுக்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கொள்ளிடம் பாலம் அருகில், ஆற்றின் குறுக்கே சுமார் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. ஆகவே, இந்த தடுப்புச் சுவர் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்தியும், அதிமுக ஆட்சி காலத்தில் கம்பசரம்பேட்டை அருகில் தரமான முறையில் தடுப்பணை கட்டிக் கொடுத்ததுபோல ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்ற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித் தர திமுக அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.9.2024 – வியாழக்கிழமை காலை 10.35 மணியளவில், ‘கொள்ளிடம் பாலம் அருகில், நம்பர் ஒன் டோல்கேட்’ என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.