பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும். இந்தியா முழுவதும் தங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக தன் அக்டோபஸ் போன்ற கரங்களால் அழித்துவிட்டது. அந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதிமுக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சி. அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து அழிந்து விடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அந்த எச்சரிக்கையைத் தான் நாங்கள் திரும்பத் திரும்பக் கூறி வருகிறோம். அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக உடனடியாக வெளியே வர வேண்டும். திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்கிற கோரிக்கையோடும், ரெய்டிற்கு பயந்தும் தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.இப்பேட்டியின் போது மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்
Comments are closed.