Rock Fort Times
Online News

அதிமுக பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி…!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தும், இந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக தொண்டராக இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கை ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளரை, அக்கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரது தேர்வைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் சூர்யமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று (09.01.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது சூரியமூர்த்தி தரப்பில், “எந்த ஒரு கட்சியிலும் இணையவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிமுக தரப்பில், “அவர் கட்சியில் உறுப்பினராக இல்லை” என்று வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “சூரியமூர்த்தியின் வாதங்களை ஏற்க முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சூரியமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்