வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. வேளாண் துறை அமைச்சர் எம் .ஆர் கே.பன்னீர்செல்வம் பேட்டி
திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜிநகர் அருகே உள்ள
கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 3 தினங்களுக்கு நடைபெறுகிறது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
கே.என்.நேரு, வேளாண் அமைச்சர் எம்.ஆர் .கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
அதனைத்தொடர்ந்து எம் .ஆர் .கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகின்ற 27, 28, 29 ஆகிய நாட்களில் கேர் கல்லூரி மைதானத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு வேளாண் சங்கமம் விழாவை தொடக்கி வைக்க உள்ளார். வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பிலான வேளாண் கண்காட்சி கருத்தரங்கம் தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை தொழில்துறை, வேளாண்மை மார்க்கெட்டிங், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளை சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெற்று புதிய முயற்சிகள், விவசாயத்திற்கு எளிமையாக லாபம் தரக்கூடிய நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபத்தை தரக்கூடிய பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது.
வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமாக கருத்துகளை வழங்க இருக்கிறார்கள்.
இக்கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பொறியியல் துறை சார்பில் விவசாய பெருமக்களுக்கு தேவையான இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்தெந்த பருவத்தில், எவ்வகை பயிரை பயிரிடவேண்டும் என்பது குறித்தும் பயிருக்கு சவாலாக இருக்கின்ற பூச்சிகளை அழிப்பது,
மாற்று பயிர் பயிரிடுவது குறித்தும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களை எவ்வாறு மதிப்பு கூட்டி விற்பது? என்பது போன்ற பயிற்சியும் இக் கண்காட்சியில் வழங்கப்படும்.
காலநிலை, உற்பத்திக்கு ஏற்ப தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக உள்ளது. உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
தக்காளி விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Comments are closed, but trackbacks and pingbacks are open.