தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் நியமனம்…* தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!
தமிழக சட்டப் பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் மற்றும் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், நாளை( ஏப்.9) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர், கழிப்பறை மற்றும் சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமானவை பட்டியலில் உள்ளன. கடந்த தேர்தல்களை விட தற்போது எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் இடங்களும் மாறி உள்ளன. கடைசியாக கண்டறியப்படும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் எண்ணிக்கையில் துணை ராணுவப் படையினர் நியமிக்கப்படுவார்கள். ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் அங்கு துணை ராணுவப் படையினர் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட துணை ராணுவப் படையினர் ஏப்.13-ம் தேதிக்குள் வந்துவிடுவார் கள். இந்தத் தேர்தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது ரூ.1,009 கோடி, முந்தைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ரூ.795 கோடி செலவானது. தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் முடிந்து கடந்த பிப்.23-ம் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது. அப்பட்டியலின்படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம். மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8.99 லட்சமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.