கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் சங்கனூர் நாராயண சாமி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மான குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு குடிநீரின் தரத்தை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து லாலிரோடு சந்திப்பில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு பணியாளர்கள் எண்ணிக்கையினை இரு மடங்காக உயர்த்தி, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆடிஸ் வீதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் இரண்டரை கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கோவைப்புதூர் பகுதியில் 591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை பணிகளை நேரில் பார்வையிட்டு ஜூன் 30-ம் தேதிக்குள் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க உத்தரவிட்டார். மேலும் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் வீட்டு இணைப்புகளை முறையாக வழங்கவும் அங்கு சரியான குறியீடு குறிக்கப்பட்டு பணிகளை செய்யவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

