நடிகை கௌதமி சமீபத்தில் நில மோசடி தொடர்பாக சென்னை வடக்கு மண்டல காவல்துறை அதிகாரியிடம் புகார் ஒன்று அளித்தார். அதில், தனக்கு அறிமுகமான சென்னையை சேர்ந்த பாஜக பிரமுகர் அழகப்பனை பொது அதிகார முகவராக நியமித்தேன் . இவரிடம் திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 3.99 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்குவதற்காக ரூ. 25 லட்சம் கொடுத்தேன். அதன்மூலம் அவர் வாங்கிய 3.99 ஏக்கர் நிலத்தின் கிரைய பத்திரத்தில் என்னுடைய பெயருடன் அழகப்பனின் மனைவி நாச்சியம்மாள் பெயரையும் இணைத்து மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது தான் தனக்கு தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி ,மகன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.