Rock Fort Times
Online News

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை…!

கோடை விடுமுறை முடிந்து இன்று(02-06-2025) பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.79 லட்சம் புத்தகங்கள்,
1,33,928 சீருடைகள் 2,41,282 புத்தக பைகள் இன்று வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு அங்கன்வாடியிலிருந்து அரசு பள்ளிகளின் முதல் வகுப்பில் 8500 மாணவர்கள் இணைந்துள்ளார்கள். அது 10 ஆயிரம் வரை செல்லும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட அதிகமாகி உள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கு வராத குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளார்கள். இருந்த போதும் தமிழக அரசு கூறியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகத்தில் இருந்து 300 மீட்டர் வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்போர் கைது செய்யப்படுவார்கள். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, பள்ளி தலைமையாசிரியர் .ம.மொசிகிரைசி, ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்