கால்வாயை ஆக்கிரமித்து பாலம் கட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொது மக்கள்…
திருச்சி உறையூரை அடுத்து உள்ள குழுமணி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாயில் அருகில் பிரியும் பாண்டமங்கலம் பிரிவு வாய்க்கால் பகுதியில் தனிநபா் ஒருவா் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இதனால் பருவமழை காலங்களில் தண்ணீர் அதிக அளவில் அப்பகுதி முழுவதும் நிரம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அவர்கட்டுமான பணிகளை தொடங்கி நடுவாய்க்காலில் இரண்டு கான்கிரீட் பில்லர்களை அமைத்துவிட்டு திரும்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்த போது அவா் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தான் விவசாயம் செய்ய போவதாகவும், அதற்காக இடுபொருட்களை கொண்டு செல்ல பாலம் தேவை எனக் கூறி அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவா் விவசாயம் செய்வதாக கூறிக்கொண்டு வாய்க்கால் அருகில் உள்ள ஆற்று மணலை அள்ளி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தப் பணிகள் முழுமையாக முடிந்தால் பருவமழை காலங்களில் மழை நீர் தேங்கி வெள்ள நீராக சூழப்பட்டு, பல்வேறு தொற்று நோய்கள் வருவதற்கான அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் விவசாயம் செய்யப்போவதாக கூறி விதிகளுக்கு புறம்பாக பாலம் கட்டி அப்பகுதி மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்த முயலும் தனிநபா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் அவா் சட்ட விரோதமாக கட்டி வரும் பால கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ்சிடம் மனு அளித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.