Rock Fort Times
Online News

பொங்கல் பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆம்னி பேருந்துகளுக்கு அரசு “செக்”…!

தமிழகம் முழுவதும் வருகிற 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் படித்து வரும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 14ம் தேதி முதல் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறையையொட்டி அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது உள்ளிட்டவற்றை இந்த குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பேருந்துகளில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும். இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, ‘பர்மிட் சஸ்பெண்ட்’ போன்ற நடவடிக்கைகளை எடுப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்